Tuesday, December 12, 2006

தெரிஞ்சவுங்க சொல்லுங்களேன்!!!–2

இன்னக்கி காலையில, பொண்ணோட பள்ளியில பரிசளிப்பு விழா. ஆண்டு இறுதியில, ஒவ்வொரு பாடத்திலயும் சிறப்பா செஞ்சவங்களுக்கு பரிசு கொடுக்கிற விழா. நம்மூரு மாதிரி ஆண்டு விழான்னு நடத்தாம, காலைப் பிரார்த்தனை கூட்டத்தில் வைச்சு கொடுக்கிறாங்க. பார்லிமெண்டு உறுப்பினருதான் சிறப்பு விருந்தினர். கருப்பு பூனை, சாம்பல் பூனையின்னு கலர்ப்பூனைகள் இல்லாமல், தானாகவே வண்டியோட்டி, பள்ளியின் பக்கத்து சந்தில் காரை நிறுத்தி நடந்து வரும் சாதரணமான ஜனநாயக உறுப்பினர்.

இது இப்படியிருக்க, நம்ம பிரச்சனை ஆரம்பிச்சதெல்லாம், பிள்ளைகள பெயர் சொல்லி பரிசு வாங்க கூப்பிடறப்பதான். பொண்ணு பள்ளியில படிக்கிறதுல எண்பது சதவிகித பிள்ளைக இந்தியா அல்லது இலங்கை நாட்டைச் சேர்ந்தவங்க. ஊருல உள்ள சாமி, குலதெய்வம், அம்மா தாத்தா, அப்பத்தா, அம்மாச்சின்னு விவரணையா நம்ம பிள்ளைக பேரு. அத கொள்ள(ல்ல) பிரியம் இங்க உள்ளவங்களுக்கு.

காயத்ரி-ய காய் ஆட்ரி-ன்னு பிரிச்சி கூப்பிட்டா, பக்கத்துல உட்கார்ந்திருந்த அம்மாக்காரிக்கு, பொண்ணு பரிசு வாங்க போனப்பதான், கூப்பிட்டது தன் பொண்ணையின்னு விளங்குது. வீடியோ காமரா, டிஜிடல் காமரான்னு முத்தாய்ப்பா உட்கார்ந்திருந்த இன்னொரு அம்மா, தன் புள்ள பேரோட வாசிச்ச தன் புருஷன் பேர கேட்டு மயக்கமாகாத குறைதான்!!! பின்ன என்ன, கருணாநிதின்னு கருணை உருவமான பேர, கருண் அனிதின்னு(Karun anidhi) வாசிச்சா வருமா வராதா மயக்கம். குசேலராசன், குஸ் ஹலராசனாவும், ராசேந்திரன் ரசந்திரனுமாகவும் இவங்க வாயில பூந்து புறப்படும்.

ஆனா அதே சமயத்துல, மகாவ்ச்கி, பொலாவ்ச்கின்ற போலந்து பெயரையும், இவானிசெவிச், டொமினிசெவிச்-ன்ற ரஷ்யா பெயரெல்லாம் அட்சர சுத்தமா கூப்பிடுவாங்க. அவங்க பெயர கொஞ்சம் நீட்டியோ, சுருக்கியோ சொல்லிட்டோமுன்னா, மூக்குக்கு மேல வர கோபத்த அடக்கிகிட்டு, அமண்டா இல்ல, அமாண்டா-ன்னு சொல்ல சொல்லி ஒரு வீட்டு பாடம் கொடுத்துட்டு போவாங்க!!! இதுக்கெல்லாம் பயந்துகிட்டு பவானி குமார், பீட்டர்-ன்னும், தியாகராஜன், டாம்-ன்னும் பெயர மாத்திகிட்டாங்க.

எல்லாம் விதின்னு, வெந்து நொந்து, விழா முடிவுல காபி குடிக்கையில, பக்கத்துல உள்ள தோழியோட அவசர ஆலோசனை. இந்த ஊரு ஆளுங்களுக்கு உச்சரிப்பு வகுப்பு எப்ப ஆரம்பிக்கலாமுன்னு. வாரத்துக்கு எத்தனை வகுப்பு எடுக்கலாம், இலவசமா அல்லது காசு கொடுத்தா, எவ்வளவு பணம் சம்பாதிக்கலாமுன்னு ஜெட் வேகத்துல ஓடுது மனக்குதிர ஒரு பக்கம். பட்டாசு மாதிரி வெடிக்கிறா தோழி, “இதெல்லாம் இவங்களுக்கு சரிப்படாதப்பா. ஒரு தடவை இல்ல, ரண்டு தடவை இல்ல, பல்லாயிரம் தடவை சொல்லச்சொல்லி சொன்னாலும், நம்மூரு பெயரு இந்த ஆளுங்களுக்கு வாயில நுழையப் போவதில்லை. நாக்குல தர்ப்பைய சுட்டு போட்டாலும், இவங்களுக்கு வாயில வரப்போறது கிடையாது” னு ஆணித்தரமா அவ அடிச்சு பேசும்போது எனக்கு பிடிபடல வினையே அங்கதான் ஆரம்பிக்க போதுன்னு.

எதுத்தாப்புல பொண்ணு உட்கார்ந்து கேள்வி கேக்குது, “எதுக்காக, தர்ப்பைய சுட்டு போட்டாலும் வாயில வராதுன்னு சொல்லுவாங்க?”

எனக்கு புரியலிங்களே, தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்!!!

Monday, December 11, 2006

தெரிஞ்சவுங்க சொல்லுங்களேன்!!!–1

மைசூர் பாகு, மைசூர் பாகுன்னு ஒரு இனிப்பு.
செய்ய தெரிஞ்சவங்களையே கிளறி முடிக்கறதுக்குள்ள ஒரு கலவரப் படுத்திவிடும். அம்மா எடுத்தது, தொடுத்ததுக்கெல்லாம் இந்த இனிப்ப பண்ணி போட்டுறுவாங்க. விருந்தாளி வந்துட்டா வீட்டுல ஒண்ணும் இல்லைன்னா, குடுகுடுன்னு ஒரு சட்டி வைச்சு, வந்தவங்க கால், கை கழுவி துடச்சி உட்காரதுக்குள்ள செஞ்சு முடிப்பாங்க. அம்மா பண்ணுற மைசூர் பாகும் அதப் பத்தின சிலாகிப்புமே வந்த விருந்தாளியோட முதல் பேச்சாயிருக்கும். (தஞ்சாவூர்க்காரியா? கொக்கா?)

இது இப்படியிருக்க, போன வாரம் இந்த இனிப்ப நானும் செஞ்சு புள்ளைக பல்லையும் பதம் பார்த்தேன். அப்பதான், புதுசா தமிழ் கத்துக்கிற மகன் இதோட பெயர்க்காரணம் கேட்டாரு. அட, இத்தன நாளு இப்படி யோசித்தது கூட கிடையாது….யோசிக்கும்போது எதனால இப்படி ஒரு பெயருன்னு புலப்படல்ல!!!

ஒரு வேள இப்படியிருக்குமோ!!! அப்பல்லாம் சந்தையில புதுசா வர சாமானுக்கு பேரெல்லாம் பங்ளூரு கத்தரிக்காய், மைசூர் சில்க், பங்களூரு தக்காளின்னு பேரு வைப்பாங்க. அந்த வகையில புதுசா வந்ததுனால மைசூர் பாகுன்னு பேரோ!!!

இப்படியிருக்குமோ, அப்படியிருக்குமோமுன்னு மண்டை காஞ்சதுதான் மிச்சம். டீச்சர கேக்கலாமுன்னா, கடைய மூடிட்டு வனாந்திரம் போயிட்டாங்க!!!!

அட, தெரிஞ்ச யாராவது சொல்லுங்களேன்!!!!

Thursday, November 09, 2006

ஏய் அழகாயிருக்கிறாய், ஆச்சரியமாய் இருக்கிறது

இயற்கையின் விந்தைகள்தான் எத்தனை!!!!!!

செக்குமாடு போல் சுத்தும்
நமது வாழ்க்கையில்
இந்த விந்தைகளை வியப்பதற்குதான்
நேரமுண்டா?

உடன் எழுகிறோம்
உடன் துயிலுகிறோம்
வரவில்லையென்றால் வருந்துகிறோம்
காட்டம் அதிகமானால் துவளுகிறோம்

அய்யா, வணக்கமுன்னு சொல்லத்தான் நமக்கு நேரமில்லை,
ஏய், அழகாயிருக்கேன்னு சொல்லித்தான் வைப்போமே!!!

உலகம் சுற்றும் வாலிபத் தம்பிக்கு
கல்யாணத்துக்குமுன்ன நேரத்துக்கு பஞ்சமில்ல
அகப்பட்டதெல்லாம் க்ளிக்கினான் – கைப்போட்டியில
அக்கா, இதுதான் அழகுன்னு வண்ணமயமாக்கினான்…..


யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்!!!!

மஞ்சள் வானம் – பேங்காக், தாய்லாந்து

href="http://photos1.blogger.com/blogger/5182/3068/1600/Bangkok_Thailand.jpg">












ஹோஸூர் ஏரிக்கரை














மேட்டூர் அணை மலையடிவாரம்













ஜனாதிபதி மாளிகை - புதுதில்லி













சிங்கை சென்டோஸாத்தீவு













ஷியோஹாமா, டோக்கியோ














கிருஷ்ணகிரி காட்டில்













நரிட்டா விமானநிலையம், ஜப்பான்













அட நம்மூருதாங்க, தைமாச பொங்கலுக்குன்னு வந்த சிறப்பு சூரியனுங்க!!!!!

Thursday, November 02, 2006

என்ன தவம் செய்தனை!!!!!

எங்க ஊரு சிங்காரவேலருங்க!!

வருஷா வருஷம் பங்குனி மாசத்துல இவருக்கு ஒரு திருவிழா. பத்து நாளும் கோலாகாலமா ஒரு கலகலப்புதான்.

பத்து நாளும் மண்டகப்படி சில சில ஊருங்களுக்குன்னு கொடுத்தாலும், கடைசி நாளு திருக்கல்யாணம் நம்ப இளைஞரணிக்குதாங்க. பெருசுங்க சொல்றது என்னன்ன, வளருர புள்ளைக கல்யாணமெல்லாம் நம்ம கலாசாரத்துபடி எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சிக்கனுமுன்னுதான் இவுகள போட்டுருக்கோமுன்னு.(இது எப்படியிருக்கு!!!!)

இதுதான் சாக்குன்னு, நாங்க ஒரே கலக்கல்ஸ்தான்.....

மணப்பந்தல்














ஒவ்வொரு வருஷமும் போடற மணப்பந்தல், முந்தைய வருஷத்த மிஞ்சனுமுன்னு கூட்டத்துமேல கூட்டம் போட்டு மண்டைய குத்தி சீத்தல சாத்தனாரு ஆவாரு, இளைஞரணி ஆஸ்தான ஆர்கிடெக்ட். இவரு போடற வடிவத்த முந்தின நாளு ராத்திரி வரைக்கும் ராஜரகசியமா வைச்சிருப்பாரு!!!! காலங்காத்தால பூக்கூடைகள கொடுத்துட்டு டிசைன் சொல்வாரு. இந்த வருஷத்து மணப்பந்தல்தான் இங்க உள்ளது. பூவ வெச்சி மின் கோந்து துப்பாக்கியால ஒட்டி முடிக்கறதுக்குல, ஒரு நாலு, அஞ்சு பேராவது சூடு போட்டுக்குவோம்.

கல்யாணக் களைப்புல வள்ளி, தெய்வானை மணவாளன்














திருக்கல்யாணம் தாரை வார்த்து கொடுப்பது, அந்த வருஷம் இளைஞரணியில திருமணமான புதுத்தம்பதிகள்.

தண்டிகையில் - திருமண ஊர்வலம்














திருக்கல்யாணம் முடிஞ்சவுடன், தம்பதிகள் தண்டிகைங்கிற இந்த வாகனத்திலதான் வீதிவலம் வருவாங்க. பார்க்க மயிலு மாதிரி இருக்கும். இதில வீதிவுலா பார்க்கும்போது, நமக்கே ஒரு பொன்னூஞ்சல்ல போன பிரமை பிடிக்கும்.
















திருக்கல்யாண கூட்டமும், கலைஞர்களும்















திருக்கல்யாணத்தன்னிக்கி கூட்டம் மென்னிய புடிக்கும். சாம்பிளுக்கு எள்ளு போட்டா எண்ணெயாயிடும். அவுக அவுக, கல்யாண சேலையெல்லம் அன்னைக்கிதான் மக்கள் தரிசனம் எடுக்கும்.

நாயனம், மேளம் எல்லாம் நம்ப இலங்கை, நம்ப ஊருல இருந்து வந்து பத்து நாளும் காது குளிரப் பண்ணுவாங்க!!!!

இப்படியாக, இளைஞரணி பட்டு வேஷ்டியிலயும், புடவையிலும் கிளுகிளுப்பத பார்க்கிறப்போ "என்ன தவம்செய்தோம் சிங்காரவேலவான்னு" சின்னதா புளகாங்கிதம் அடையச்சொல்லும்.

Friday, August 18, 2006

இப்படியும் ஒரு கணக்கு

ஒரு வருசத்துக்கு - 8896.66 வெள்ளி
ஒரு மாசத்துக்கு – 741.38 வெள்ளி
ஒரு வாரத்துக்கு – 171.08 வெள்ளி
ஒரு நாளைக்கு – 24.24 வெள்ளி
ஒரு மணி நேரத்துக்கு – சராசரி ஒரு வெள்ளி

இது என்ன கணக்கு தெரியுமா? எங்க நாட்டு அரசாங்க கணக்கு.

மத்திய வர்க்க குடும்பத்துல ஒரு குழந்தையப் பெத்து 18 வயசு வரைக்கும் வளக்கறதுக்கு ஆகுற செலவு 160140 வெள்ளிகள். (இந்திய ரூபாயுக்கு 52,84,620 ). இது பள்ளிகூடம் படிக்கிற வரைக்குந்தான். காலேஜ் செலவு, நன்கொடை எதுவும் கிடையாது. (ஆத்தாடி, இம்புட்டு ரூவாயான்னு ஏங்கறது என் மாமியாருதான்!!!!)

இத பார்க்கும் பொழுது கொஞ்சம் பணம் பார்க்கணும்னா குழந்தைய வேணாமுன்னு இருக்கறதுதான். அப்படியும் இருக்கிறாங்கோ நிறைய பேர் இங்கே. அவங்களுக்கெல்லாம் DINKS- ன்னு பேரு- Double Income No Kids). இவங்களுக்கெல்லாம் தெரியுமா, என்னத்த இழக்கிறாங்கன்னு???

160140 வெள்ளி செலவு செஞ்சா:
நம்ம இஷ்டத்துக்கு பேரு வைக்கலாம் (தற்காலிக தலைவராயித்தான்)
கோவிலுக்கு போகாமலே கடவுள தினத்துக்கு பார்த்துக்கலாம்
நடு ராத்திரி போர்வைக்குள்ளேர்ந்து சிரிப்பையும்(சிலசமயம் அழுகையையும்) கேட்கலாம்
உங்களாலேயே தாங்க முடியாத பாசத்தை பார்க்கலாம்
Flying கிஸ்ஸையும், ஐ லவ் யூ அப்படின்னு அடிக்கடி கேட்கலாம்
எறும்பையும், மரத்தையும், யானையையும், பூனையையும் பத்தி நிறைய தெரிஞ்சிக்கலாம்
பற்றிக் கொள்ள ஒரு கை கிடைக்கும் (என்னா, மிட்டாய் பிசுக்கும், ஐஸ் க்ரீம் சபக்கும் சேர்த்துத்தான்)
வேலையே பறிபோயிருந்தாலும், கப்பல் கவிழ்ந்திருந்தாலும், வீட்டுக்கு வந்தோன்ன சிரிக்கலாம்

160140 வெள்ளி கொடுத்து, உங்க வயச மறந்துட்டு:
க்ரேயான் கலரடிக்கலாம்
சாட்-பூட்-த்ரீ விளையாடலாம்
ஒளிஞ்சு புடிச்சு விளையாடலாம்
தட்டாம்பூச்சி பிடிக்கலாம்
இடி இடிச்சா அர்ஜூனா காப்பாத்துன்னு சரணடையலாம்

160140 வெள்ளி கொடுத்து:
மந்திரவாதி மாண்ட்ரேக், துப்பறியும் சாம்பு, ஜேம்ஸ்பாண்ட் கதை படிக்கலாம்
எந்த தொந்தரவுமில்லாம Tom and Jerry கார்ட்டூன் பார்க்கலாம்
வெட்கமில்லாம அரிச்சுவடி திரும்ப படிக்கலாம் (இந்த முறையாவது சரியா படிக்கலாம்)

160140 வெள்ளி கொடுத்து அப்பப்ப வீட்டுல கதாநாயகன் ஆகலாம், இப்படி:
ஒழுங்கா பட்டம் விட்டு
சைக்கிள் சங்கிலி மாட்டி விட்டு
சரியா பம்பரம் குத்தி
குறி தவறாம கோலி அடிச்சி
காலுல தச்ச முள்ள நோகாம எடுத்துவிட்டு
சரியா பௌலிங் போட்டு

160140 வெள்ளி கொடுத்து, சரித்திர நிகழ்வுகள கண்கூடா பார்க்கலாம்:
முதல் அடியெடுத்து நடந்தத
முதல் வார்த்தை பேசியத
முதல் முத பள்ளி சென்றத
முதல் மேடையேற்றத்த
முதல் முற காரோட்டியத

160140 வெள்ளி கொடுத்து,
இலவசமா மனவியல், செவிலியியல், நீதியியல் அப்படின்னு எல்லா துறையிலும் முதுகலை பட்டம் வாங்கிவிடலாம்.

இப்படி எல்லாம், 160140 வெள்ளி கொடுத்து வேறெங்காவது கிடைக்குமா? சொல்லுங்களேன்

டிஸ்கி: இது எங்கேயோ படிச்ச கட்டுரையின் பாதிப்பு!!!!!

Friday, July 28, 2006

நாங்க ரெடி, 1087 பேரு ரெடியா????

வெனிஸுல பார்ட்டிக்கு எல்லா தயார் செஞ்சாச்சுங்க. ஏற்பாடெல்லாம் எப்படி????
சும்மாவா பின்ன, 500 மணி நேர மைக்ரோசாஃப்ட் ஒவியமாச்சே!!!!

Wednesday, July 26, 2006

வாழ்த்துக்கள் மழைப்பெண்ணெ!!















என்னங்க, மழை வர மாதிரி இருக்குல்ல?
பின்ன இருக்காதா,
மழையோட
பிறந்த நாளன்னக்கி.
வாழ்த்திவிடுவோமே மழைப்பெண்ணை,
“பல்லாண்டு வாழ்க”

Thursday, July 20, 2006

தொலைநோக்கி!!!!

என்னே ஒரு தொலைநோக்கு பார்வை!!!!!!

தலைகீழ் பாடம்!!!!

ஏம்பா எல்லாத்தையும் தலைகீழாவே செய்யுறாங்கோ இந்த பெரிய அண்ணன்கள்??????
வலையில சுத்தி சுத்தி நம்மக்கிட்ட மாட்டிக்கிடிச்சிங்கோ!!!

தலைவலி தாங்கமுடியலிங்கோ, தலைவருக்கு!

Tuesday, July 18, 2006

மரணம் – பரிணாம அறிமுகங்கள்

அறியாத ஐந்து வயசெனக்கு. சக்கரை வியாதியுடன் தாத்தா ஆசுபத்திரி படுக்கையில. மூச்சு விட சிரமப்பட்ட தாத்தாவுக்காக, அப்பா மருத்துவரை கூப்பிட போயிருந்தார். பக்கத்திலிருந்த அத்தை, தாத்தாவுக்கு பாலூத்த சொன்னதினால, தாத்தாவுக்கு பால் ஊத்தினேன் புரியாமலே. அது இப்பொது புரிய வைச்சது, கடைசிப்பாலுன்ன என்னான்னு!!!

சிட்டான எட்டு வயசெனக்கு. மண்டை வெடிக்கும் உச்சி வெயிலில, களத்துமேட்டுல இருந்த மாமாவுக்காக காப்பியுடன் பறந்து போனேன். பாதி வழியில புல்லட்டில் சித்தப்பா, “இந்த வெயிலில போனா கறுப்பா போயிடுவே, இங்க கொண்டா நான் கொண்டு போறன்” என்ற கரிசன உபசரிப்பு. மாட்டேன்னு, கைக்கு ஆப்புடாம ஓடினேன். அதுதான் சித்தப்பாவின் கடைசி வார்த்தைகள் என்னோட. களத்துமேட்டில இருந்து வீட்டுக்கு போகும் முன்னே செய்தி. சித்தப்பா மாரடைப்பில் இறந்துவிட்டாருன்னு. சித்தி அப்போ அறிமுகப்படுத்தி வைத்தாள் அதிர்ச்சின்னா என்னன்னு!!!!

சில்லுகோடு, நொண்டியாட்டமுன்னு தெருவை ரண்டாக்கும் வயசெனக்கு. கூடித்திரிஞ்சு சில்லுகோடு விளையாண்ட மும்தாஜ், தாங்க முடியாத தொண்டை வலின்னு அவதிப்பட்டா. உப்புத்தண்ணி கொப்பளித்து, சுண்ணாம்பு பூசியும் சரியாகலைன்னு பாண்டிக்கு போனா. வழியனுப்புறேன்னு தெரியாமல், இரண்டு பேரும் “பாபி” ஸ்கர்ட் போட்டுருக்கோமுன்னு பெருமப் பட்டேன். மும்தாஜ் திரும்பி வந்தாள் பெட்டியில் பத்திரமாக. பச்சை நிற பெட்டியில் வழியனுப்பிய போதும் புரியல்ல “கேன்சர்”ன்னா என்னான்னு!!!

வீரமுறுக்கேறிய வயசு எனக்கு, வீட்டுக்கு அப்பப்ப மாமாவோட சண்டை போட்டுட்டு வரும் அத்தை, நாலு நாள் கழித்து திரும்ப கீவளூர் போய்விடும். மாமாவோட முட்டக்கண்ணையும், இந்திரா காந்தி மூக்கையும் பார்த்து அரண்டு இவர ஏனத்த கலியாணம் கட்டிக்கிட்ட, பேசாம விட்டுட்டு எங்க கூடவே இருந்துடேன்னு. பொண்னுன்னா பொறும வேணுமுன்னு அத்தை அறிவுரை போதிக்கும். போதித்த அத்தையை அடுத்து பார்த்தது துணி மூட்டையாக ஆசுபத்திரியிலிருந்து. காசு கொடுக்க வில்லையென்று, கோபக்கார மாமா, கடப்பாறையால் அத்தையின் பொறுமையை ஒரேயடியாக குத்தி கொன்னுபோட்டார். இன்னமும் புரியவில்லை ஆத்திரம், பொறுமையின் விலை உயிரான்னு!!!!!

கல்யாண வயதில் அக்கா, அவளுக்கு செய்யும் நகைகளைப் பார்த்து பொறாமைப்படும் இரண்டுங்கெட்டான் வயசெனக்கு. உதிரப்போக்கு அதிகரித்த அக்காவுக்கு, பக்கத்து வீட்டு நர்சம்மா அவசரத்திற்கு போட்ட “ஸ்ட்ரெப்டொபயான்” ஊசி விஷமாகியது. அக்காவின் கண் செருக, கழிவறைக்கு போகவேண்டுமென அவசரப்பட்டாள். அய்யோ அது சாவின் அறிகுறியென அம்மா அலற, அப்பாவின் மடியில அக்கா, அப்பாவின் விரல்களின் 1, 2, 3 நிச்சயம் பண்ணிக்கிட்டிருந்தா. தம்பி, பக்கத்து வீட்டு தொலைபேசியில் ஆம்புலன்சை கூப்பிட, நான் சாமியறையில் தஞ்சம், எனக்கு நகையே வேண்டாம், என்னோட எல்லாத்தையும் அக்காவுக்கே கொடுத்துடறேன், எங்க அக்காவ திருப்பி கொடுத்துடுன்னு. உடனடி சிகிச்சையில் மறுபிறவி எடுத்த அக்கா சொல்லித்தந்தாள், உயிரின் மதிப்பு என்னன்னு!!!!

வாழ்க்கையை புரிந்து கொள்ள முயற்சிக்கும் இருபது வயசெனக்கு. ஓளித்து வைத்து சாராயம் குடிக்கும் மாமாவுக்கு நாற்பது வயசு. சாராய போதையில், எந்த போத்தலுன்னு தெரியாமல், பாலிடிராயில் குடித்தது. உள்ளூர் சண்டயினால பண்ணை வீட்டுக்காரன் ஆசுபத்திரி கூப்பிட்டுட்டு போக கார் கொடுக்கமாட்டேனுட்டான். அடிச்சு பிடிச்சு, மூனாம் நம்பர் பஸ்ஸில பெரியாஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போனாங்க. “மங்கை, தெரியாம குடிச்சுபுட்டேன், என்ன எப்படியாவது காப்பாத்துன்னு” மாமாவின் கடைசி வார்த்தைகள். குடியில் எரிஞ்ச குடலிலிருந்து விஷத்தை முறிக்க முடியவில்லை. இப்போது நல்லா புரிகிறது, குடி குடியை மட்டுமல்ல, உயிரையும் குடிக்குமுன்னு!!!!

குடும்பத்துணைவியாக பதவி உயர்வடைந்த இருபத்தெட்டு வயசெனக்கு. தாயாக அடுத்த பதவி உயர்வுக்காக காத்திருந்தோம் நானும், தோழியும். பிரசவ அவஸ்தையில் தோழி ஆசுபத்திரியில். தொப்புள் கொடி கழுத்தை சுத்தி காலில் சுத்தியிருந்ததால், குழந்தை வெளியே வர வர கழுத்தை இறுக்கி, ஸ்டில் பார்ன் குழந்தை. அப்போது புரிந்தது ஜனனத்தில் மரணம் என்னன்னு!!!!!

வாழ்க்கையை வெல்லத் தொடங்கிய, முப்பது வயதெனக்கு. ஊரிலிருந்து தொலைபேசியில் செய்தி, தொன்னூற்றி ஆறு வயது அம்மாதாத்தா இறந்து விட்டாரென. நல்லாதென இருந்தார், என்ன ஆச்சுன்னு புரியாம அழுதபோது, அம்மம்மாவின் சமாதானம். “அழக்கூடாது, தாத்தா நம்மளெல்லாம் விட்டுட்டு சாமிக்கிட்டத்தான் போயிருக்கார், உடனே வரணுமென்ன அவசியம் இல்லை. சாவதானமா கிளம்பி காரியத்திற்கு இருக்கிற மாதிரி வந்தா போதும்”. அப்போது புரிந்தது, முப்பது வயசிலேயும் நாமெல்லாம் ஒரு வகை குழந்தைதானென்னு!!!!!!!!

அவசர வாழ்க்கை முப்பத்தஞ்சு வயசெனக்கு. அலுவலகத்தில தேனீர் இடைவேளியில் தோழியுடன் சின்ன குடும்ப சுமையிறக்கல்கள். தோழியின் கைத்தொலைபேசி அலறியது, வீட்டு வேலைக்காரன் சொன்னான் அவள் கணவருக்கு உடம்பு சரியில்லை, ஆசுபத்திரியில் சேர்த்திருப்பதாக. ஆசுபத்திரியில சொன்னாங்க அவர் மாரடைப்பில் நடு இரவிலேயே இறந்து போனாருன்னு. அவர் இறந்து போனது கூட தெரியாம பக்கத்தில படுத்திருந்திருக்கேன்னு தோழி கதறினா. அன்னைக்கு புரிந்தது மரணபயமுன்ன என்னன்னு!!!!!

Monday, June 26, 2006

நினைவாற்றின் ஆறு

மழைப்பெண்ணே, இத்துனை கஷ்டமாக ஒரு கேள்வியை அனுப்பி விட்டீர்கள். இதை விட விண்மீண்களை எண்ண சொல்லியிருக்கலாம்.

நினைவுகளை அளக்க கோல் ஒன்றும் தெரியவில்லை. எனினும் தட்டி விட்ட நினைவுக்குதிரைகள் வெகு தூரம் இழுத்து சென்று விட்டது. இழுத்து கடிவாளத்தைப் போட்டு விட்டு இந்தோ சில மலரும் நினைவுகள்


இப்படி நடந்திருந்தால்

1. பொறியியல் கல்லூரிக்கு மாறாமல் மருத்துவ கல்லூரியிலே தொடர்ந்து படித்திருந்தால்:
2. சுந்தரை (அவருதாங்க என்ற வீட்டுகாரர்) சந்திக்காமல் இருந்திருந்தால்
3. சென்னையில் வேலை கிடைக்காமல் இருந்திருந்தால்
4. தாய்நாட்டிலே இருந்திருந்தால்
5. மழைப்பெண்ணை சந்திக்காமல் இருந்திருந்தால்
6. வேறென்னங்க இந்தத் தொடரை எழுதிக்கொண்டிருக்க மாட்டேன்

விம்மி பம்மும் தருணங்கள்:
1. “ஜன கன மன” என தேசிய கீதத்தை சினிமாவில் பாட கேட்டாலும் மூச்சு முட்டி நெஞ்சு செருமுவது
2. கல்யாணமாகி மகள் தாய் வீட்டை விட்டு கிளம்பும் பொழுது அனைவரும் கண்ணீருடன் வழியனுப்ப அந்த இடத்தில் என்னையும் எனது குடும்பத்தையும் இருத்தி கண்டு விம்முவது
3. பிள்ளைகள் மேடையில் பரிசு வாங்கும் பொழுது என்னையும் அறியாமல் கண்ணில் வழியும் ஈரத்துளிகளில் பெருமிதப்படுவது
4. நான் செல்லாத குடும்ப நிகழ்ச்சியன்று அனைவருடம் தொலைபேசியில் பேசி, என்னை மட்டும் அனாதையாக இங்கு அனுப்பி விட்டீர்களே என்று குற்றம் சாட்டி கேவுவது
5. பிள்ளைகளின் எதிர்பாராதப் பரிசைப்பார்த்து ”என்ன தவம் செய்தேன் யசோதா” எனக் களிப்பது
6. பிள்ளைகளின் முதல் ஸ்பரிசத்தை இன்றும் உராசிப்பார்த்து பம்முவது

மனதை உராயும் திரைப்பாடல்கள்:
1. மௌனமான நேரம் - சலங்கை ஒலி
2. கண்ணாளனே - பம்பாய்
3. ஏதோ ஒரு பாட்டு - அழகி (என்று நினைக்கிறேன்)
4. ராசாவே உன்னை – வைதேகி காத்திருந்தாள்
5. போகுதே போகுதே - கடலோரக் கவிதைகள்
6. மேகமே மேகமே - பாலைவனச் சோலை

பிடித்த கவிஞர்கள்:
1. கவியரசு கம்பர்
2. பாரதியார்
3. மு. மேத்தா
4. வைரமுத்து
5,6. இன்னும் யாரும் மனதைத் தொடவில்லை


திரும்ப திரும்ப வாசிக்கும் புதினங்கள்:
1. மோகமுள்
2. பச்சைவெயில் மனது
3. மெர்க்குரிப் பூக்கள்
4. செயகாந்தனின் இலக்கிய சிந்தனைகள்
5. Atlas shrugged
6. Fountainhead


இதமாக பரவசமான நேரத்துளிகள்:
1. நீ, இனி ஊருக்கு செல்லவேண்டாம், ஏனெனில் நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று சுந்தர் சொன்ன நேரம்
2. பெற்றோர் இல்லாமல் கல்யாணம் செய்து கொள்ளவேண்டிய நிலையாகும் போலுள்ளதே என்று விசனப்பட்ட நேரம், நடு இரவு தட்டிய கதவை திறந்த பொழுது நின்ற தாய் தந்தையரைப் பார்த்த பொழுது
3. நீ சூள் கொண்டுள்ளாய் என்று பெண் மருத்துவர் சொன்ன பொழுது
4. இரண்டாவது குழந்தை பெண் என்று பிரசவத்தின் பொழுது இருந்த குழந்தை மருத்துவர் கூறிய பொழுது
5. குடிபெயர்ப்பு விசா கிடைத்துவிட்டது என்ற ஈமெயில் படித்த பொழுது
6. 14 ஆண்டுகள் தேடிய தோழியை, இறுதியில் கண்டுபிடித்து அளவலாவிய நாள் அவளது பிறந்த நாள் என்று அடுத்த நாள் அவளது ஈமெயிலிலிருந்து அறிந்த பொழுது.

போறுங்க இந்த விளையாட்டு…….

நினைவுகளை மடை போட்டு நிறுத்த முடியவில்லை. இதை படிக்கும் அனைவரும் நினைவுகளை அலசுங்களேன்.

Thursday, June 22, 2006

வீட்டிலே விஷேசமுங்க

வீட்டிலே விஷேசமுங்க!.... ஆமாமுங்க, பொண்ணு பெரியவளாகி போனாளுங்க!!!!!

நமக்கு இதெல்லாம் பெரிசா பண்ணனும் அல்லாட்டா இது ஒரு விஷேசமுன்னு நினைக்க தோணலைங்க. ஆனால் நம்ப நேரம் பாருங்க, மாமனார் மாமியார் இப்போ நம்ப கூட. இல்லேன்னா அமுக்கி வாசிச்சி வேற எப்போவாது சொல்லி இருப்பேணுங்கோ. அது முடியாமல் (நம்ம பொண்ணோட நேரம் இப்படி மாட்டிகிச்சுங்க!!!)

அப்புறம் அதையேன் கேக்குறீங்கோ! வீடு ஒரே தடபுடல்தான். முதல் வேலை அவர்களை பள்ளி அனுப்பாமல் ஐந்து நாள் மட்டம் போட வைத்ததுதான் (பள்ளி திரும்பும்பொது ஃப்ளூன்னு ஒரு பொய் கடுதாசி வேற!!!) நடந்த களேபரத்தை பாத்து நம்ம பதினாலு வயது மகன் கேட்டாருங்க, "இது எல்லாம் என்னன்னு?" அவருக்கு உண்மை சொல்லோனும் என்று (இந்த ஊர் பிள்ளையில்லையா?), வந்து அவள் பெரியவள் ஆகி விட்டாள் என்று ஒரு இழு இழுத்தால் ”ஓ! இனி அவளுக்கு மாத மாத விசிட்டர் வருவார்களா?” என்று ஒரு அடி அடித்தார் பாருங்கோ!!

மாமி அடுத்து உட்கார்ந்தாள் ஊரில் உள்ள அனைவருக்கும் சந்தோஷ செய்தி சொல்ல. அடுத்த வீட்டு பூனை எலியிலிருந்து, அடுத்த ஊர் செல்லக்கிளிக்கு கூட ஒரு மணி நேரத்தில தெரிஞ்சி போச்சுங்கோ இந்நாட்டின் புதிய நிகழ்ச்சி. இதனால இன்னொரு நல்லதுன்னா, ரண்டு வருசமா சடச்சுகிட்டிருந்தா பெரிய பொண்ணோட மாமி பேசியாச்சு.(நல்ல காலத்தில ஒரு விடிவு பிறக்குமுன்னுவாங்களே, அது இதுதானா?)

இரண்டாம் நாள் ஆலோசனை கூட்டம் நம்ப வீட்டிலே, விஷேசம் எப்படி, எங்கே வைப்பது? யாரெல்லாம் கூப்பிடறது?!! மண்டையிடி அளவில்லமால் எனக்கும் என்ற வீட்டுக்காரருக்கும்தான். வேறென்னா, என்னத்த சொல்லி கூப்பிடறது? நண்பர்கள் குழுவில எல்லாருக்கு பெண், ஆண் குழந்தை உண்டுங்க. பெண்ணை சமாளித்து விடலாம். பையன்களிடம் என்ன சொல்றது!!! இல்லேன்னா அவுக கேட்டு போடுவாங்களே,"எங்களுக்கு மீசை முளைக்க ஆரம்பிச்சாச்சு, ஒரு விழா எடுன்னு!!!

மூன்றாம் நாள் ஆலோசனைக் கூட்டம் தோழிகளுடன். தொலைபேசியில் விவாதம், விஷேசம் வைக்கணுமா, வேண்டாமான்னுதானுங்க. ஒரு தோழி சொன்னாளுங்கோ, அம்மாம்மாவை கேளுன்னு, நம்ப அம்மம்மாவின் விதுர ஆலோசனை தோழிகளிடம் மகாபிரசித்தமுங்க.

இப்படியாக நாலாம் நாள், அடி தொலைபெசியை அம்மம்மாவுக்கு.

அம்மம்மா: நல்ல செய்திதான் கண்ணு. அடி இன்னொரு போனஸ் எனக்கு. (பி.கு: அம்மம்மாவுக்கு தொன்னூறு வயசு. எந்த ஒரு குடும்ப விஷேசத்தையும் எண்பது வயசுலேருந்து வாழ்க்கையின் போனஸ் என்று சொல்லி கொண்டு இருக்குமுங்கோ!)

நான்: இதை ஒரு விஷேசமா கொண்டனுமாங்கம்மா? மாமியார் செய்யோனும் என்று சொல்றாங்கோ? மகளுக்கு அது ஒரு தொந்தரவாக இருக்குமே என்று நினைக்கிறோமுங்கம்மா.

அம்மம்மா: அந்த காலத்தில் இது ஒரு அறிவித்தலா இருக்கட்டுமுன்னு செஞ்சோம். இப்ப இது தேவையில்லைதான். ஆனால் உனது மாமியருக்காக நீ செய்யோனும் கண்ணு.

நான்: இந்த காலத்துலே அதுவும் இந்த ஊரில் இதெல்லாம் வேணாமுண்டு மாமியாருக்கு புரிய வைக்கலாமாங்கம்மா?

அம்மம்மா: நாங்க எல்லாம் இது மாதிரி ஏன் கொண்டாட விரும்புறோமென்னா, புள்ளைய இது மாதிரி சிங்காரிச்சி அழகு பாக்கத்தான். அது கலியாணம் கட்ற வயசு வரைக்கும் நாங்களெல்லாம், உயிரோட இருப்பமா, என்னாண்டு தெரியாத நிச்சயத்திலே இப்படி பாத்து போட்டமோன்னா நிம்மதியா இருப்போம் கண்ணு!

நான்: சரியம்மா, எத்தனாவது நாள் செய்யோனுமுங்கம்மா!

அம்மம்மா: நாள் கிழமையெல்லாம் தேவையில்லை, கண்ணு. உனது தோழிங்களுக்கு எந்த நாள் வசதியோ, அந்த நாள் தான் நல்ல நாள்.

இப்படியாக,அம்மம்மாவின் ஆலோசனையிலே ஒரு ஞாயித்துக்கிழமை பொண்ணுக்கு விஷேசம் நடத்தி போட்டோமுங்கோ!

நீங்க கேக்குறதுக்கு முன்னே சொல்லி போடுறேணுங்கோ, பையனுங்களுக்கு என்ன சொன்னோமுன்னு. அதுக்குத்தானுங்க தாய்களின் தினம் அன்று வைச்சதே!!!!!!

Wednesday, June 14, 2006

நான் கோழையா? விவேகியா?

ரொம்ப நாளா மனசுக்குள் ஒரு நிரடல் !!!

இதுவரை வந்த பாதையிலே நிறைய வேடதாரிகளை பார்த்தாச்சு. ஓவ்வொருவரும் ஒவ்வொரு விதம்!!!

வாழ்க்கையே நாடகமேடையில் அல்லது திரையில் என்பவர்களை பற்றி நான் சொல்லவில்லை! வாழ்வையை ஒரு மேடை என்று நினைத்துக்கொண்டு, நம்பளை எல்லாம் முட்டாளாக்கும் குள்ள நரிகளைப் பற்றித்தான்!

இப்படிப்பட்ட ஒரு கயவனை உங்கள் முன் கூண்டேற்ற விருப்பம்!!!

" படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்" அப்படின்னு பாட்டி சொன்ன பழமொழியை கேட்டதுண்டு. போலிச் சாமியார், பெண் சாமியார் என்று செய்திகளில் படித்துள்ளேன். ஆனால் இப்படி ஒருத்தரை நேரில் பார்த்தபொழுது எழுந்த கொதிப்பு இன்னும் அடங்கவில்லை. இந்த சாமியார் விளையாடுவதெல்லாம் பச்சிளம் பாலகிகளில் இருந்து, பருவப்பெண் வரைக்கும். சாமியார் என்பதினால், இவர் காவி கட்டி, ஆச்ரமத்தில் வசிப்பவர் இல்லை. இரு பிள்ளைகளுக்கு அப்பன்.

தாய்நாட்டில் உறவினர்களை விட்டு அயல் நாட்டில் உள்ள நமது நாட்டினரில் தமது உறவுகளை கண்டு களிக்கும் மறத்தமிழர்களில் இவனும் ஒருவன். இந்த கயவனின் ஆதிமூலம்…....

தொழில் நுட்பத் துறையில் மேல் படிப்பு படித்து (என்ன படித்தானோ!!! இல்லை படித்தது இதையும் சேர்த்தா என்று தெரியவில்லை!!!!!) இந்தியாவிலும், இப்பொழுது இங்கும் ஒரு பெரிய புகழ்பெற்ற கம்பனியில் மேலதிகாரியாக பணியாற்றுபவன் (நல்ல கெட்-அப் தான்!) . வீடோ ஒரு சின்ன கோவில் மாதிரிதான். திரும்பிய இடமெல்லாம் மதகுருக்களின் படங்களும் (யார் யார் என்ற பேர் வேண்டாமே!!! அவர்களை அவமதிப்பது போலாகும் இவனின் திருவிளையாடல்கள்) வீட்டு புத்தகாலயமோ சமய, நீதி மற்றும் பெரும் போதகர்களின் புத்தகங்களால் நிறைந்து இருக்கும். காலை, மாலை என இரண்டு மனி நேர பூசைகள். உண்ணும் உணவோ உப்பு, காரம் தாளிதம் இல்லாமல் (அதனால்தான் சுரணை இல்லையோ என்னவோ!!!) இது எல்லாம் போதாது என்று வார விடுமுறை தினம் உள்ளூர்களில் சமய, வேத, உபநிஷத போதனைகள். வெளி நாட்டில் இதற்கு உள்ள மவுசை கேட்கவா வேண்டும். கூட்டமோ, கூட்டம். நமது வேதங்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும், கலாச்சாரத்தை கற்று கொள்ளவும் என்று ஆர்வமுடன் மொய்க்கும் இளைஞர் அணி ஒரு பக்கம்.

இத்துனை பெரிய சாமியாருக்கு எல்லா வீட்டிலும் பெரிய தடபுடல் வரவேற்பு. வீட்டில் பெரிசுகள் இருந்து விட்டால், இவன் எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக ஆகிவிடுவான். " பாரு, இந்த வயசில் இப்படி ஒரு ஞானம் என்று" அழகான இப்படி ஒரு மாயக்கண்ணடி அனைவருக்கும் மாட்டி விட்டு விட்டு, இந்த ஆசாமி விளையாடுவதெல்லாம், வீட்டு பெண் குழந்தைகளிடம்தான். எப்படியோ அனைவரது கண்ணிலும் மண் தூவிவிட்டு சின்னச் சின்ன சில்மிஷங்களை ஆரம்பித்துவிடுவான்.

பாலியல் கல்வி என்பது, இங்கு பள்ளிகளில் உள்ளதுதான். ஆனால் அது ஐந்தாம் வகுப்பிலிருந்துதான். அது வரை "தொடுதல்" பற்றித்தான் பள்ளியில் சொல்லித் தருவார்கள். பெற்றோர்கள் (என்னையும் சேர்த்துதான்) பிள்ளகளை குழந்தையாகவே பாவித்து சில விடயங்களை சொல்லித்தருவதில்லை. (பிஞ்சிலே பழுக்க வேண்டாம் என்றுதான்)

இந்த சாமியாரின் லீலைகளைப்பற்றி நான் கேள்விப்பட்டபொழுதெல்லாம், நம்ப முடியாத அதியசமாகவே இருந்தது. சின்னப் பிள்ளைகளிடம் செய்த சில்மிஷங்களைப் பார்த்த பொழுது, ச்சீ, ச்சீ அப்படியெல்லாம் இருக்காது, எனது கண்ணோட்டம்தான் சரியில்லை, எனது கண்தான் காமாலைக்கண் என்று நினைத்து இருந்தேன்.

கடந்த இரு வாரத்திற்கு முன்பு குடும்ப தோழி எனக்கு தொலைபேசியடித்து அழமாட்டாத குறையாக, இவனின் திருவிளையாடல்களை (அவளது 16 வயது பருவப்பெண்ணிடம்) சொன்ன பொழுது, எனக்கு காமாலை கண் இல்லையென்று உறுதியானது. கணவரிடம் பேசும்பொழுது இனிமேல் அவனை வீட்டுக்குள்ளே விடக்கூடாது என்று முடிவு செய்தோம். ஆனால் இதனொடு கொடுமை முடியவில்லை.

இதுவரை கேள்வி ஞானமாக இருந்ததை, போன வார இறுதியில் கண்கூடாக கண்ட பொழுது அடைந்த கொதிப்பு இன்னும் அடங்கவில்லை. ஓரு சக நண்பரின் வீட்டு விருந்துக்குக் சென்றிருந்தோம். விருந்து முடிந்து, சின்னச் சின்னக் கூட்டமாக அளவாலவிக்கொன்டிருந்தோம். நான் எனது பெண், மற்றும் நண்பர்களின் குழந்தைகள் எல்லோரும் ஹால்வேயில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது அங்கு வந்த இவன் எனது தோழியின் பெண்ணை பின் புறமிருந்து கட்டி தழுவிவிட்டு எங்களிடம் கலந்து அசடு வழிய ஆரம்பித்தான்.

கண்ணெதிரே கண்ட வெறி, பளார் என்று ஒரு அறை விடவேணும் என்ற வேகம் இதனை அடக்கி கோட் பாக்கேட்டுக்குள் எனது கைகள், மானசீகமாக அவன் கழுத்தை நெறித்தது.

உடனேயே தண்டிக்க வேண்டும் என்ற ஆவேசம் இருந்தது. ஆனால் விவெகம் அதனை தடுத்து விட்டது!!!! அத்தனை பேர் முன்னிலும் அவனை அடிக்க எனக்கு தைரியம் இருந்தது, ஆனால் அவனை ஏன் அடித்தேன் என்று சொல்ல தைரியம் வரவில்லை.

இள ரத்தமாக இருந்த பொழுது இருந்த தைரியத்தை நான் இழந்து விட்டேனா? இதனின் தீர்வு என்ன? இவனை சமுகப்பிரஷ்டம் செய்வெதென்பதுதான் தீர்வா?

உதவுங்கள் நண்பர்களே….

Wednesday, June 07, 2006

எனது மகனின் பேரம்…..

பேரம் பேசி பொருள் வாங்கறது சிலவங்களுக்கு கை வந்த கலை.

நம்மளவர் இதில் சரியான திறமைசாலி. கடைக்காரன் சொல்லிய விலைக் கொடுத்துவிட்டால் அவருக்கு அந்த பொருள் இனிக்காது. வாங்கிய ஒரு சாமானில் பலிக்காது என்றால் இன்னொன்று வாங்கி அதையும் இதையும் சேர்த்து என்று ஒரு பேரம் பேசி விடுவார். இதனால் நமக்கு அடிக்கடி லாட்டரி அடிக்கும். வேறென்ன அவர் வேண்டாம் என்று தட்டிக் கழித்த பொருள்களையெல்லம் சந்தர்ப்பம் பார்த்து புகுத்தி விடுவது. இவரின் பாச்சா எதிலும் பலிக்க வில்லை என்றால் ” சீ, சீ இந்த பழம் புளிக்கும் கதையில் அந்த பொருளைப் பற்றி கடைக்காரன் எதிரில் பெசிகொண்டிருப்பார்” ஆண்டு இறுதி கணக்கு முடிப்பவன் என்றால், இவர் தலையில் அப்பொருளை கட்டி விடுவான். இதன் கடைசி முகமாக, அவன் பில் எழுதும்பொழுது, டெலிவரி கட்டணத்தையும் அவனிடம் கறந்து விடுவார்.

நமது பேரத்திறமையெல்லாம் பூக்காரி அளவோடு சரி. மற்றபடி, ஒரு கோர்ஸ் படித்தால்தான் திறமையை பட்டை தீட்ட முடியும்.

இது இங்கனம் இருக்க, எங்களுக்கு பிறந்த சீமந்த புத்திரன் அனைவரையும் தூக்கிச்சாப்பிட்டு ஒரு பேரம் பேசினார் பாருங்க தனது மூன்று வயதில்!!!

தில்லித்தலைநர் வாரச்சந்தையில் தத்தக்கா, புத்தக்கா என்று நடை பயின்று சென்றவர், திடீரென்று சப்பாத்திக்கல் விற்கும் கொல்லன் கடை முன் நின்று விட்டார்.

மகன்: ஹே! அண்ணா, இது என்ன விலை?
கொல்லன்: பதினைந்து ரூபாய், கண்ணு.
மகன்: சரி, சரி, இருபத்தைந்து ரூபாய்க்கு தா!!!!!!

சுற்றி இருந்தவர்களோ கொல்லென்று சிரிக்க, கொல்லன் மகனை வாரித்தூக்கி, உச்சி முகர்ந்து சப்பாத்திக்கல்லை கொடுத்தான். எத்தனை சொல்லியும் காசு வாங்கவில்லை. ஆனால், அடுத்தடுத்து, தில்லி சப்பாத்திக்கல் எனது உறவினர்கள் அனைவருக்கும் அவனிடம்தான் வாங்கினோம்(காசு கொடுத்துதான்).

இன்றும் சப்பாத்திக்கல்லை பார்க்கும் பொழுது, மகனின் தத்தக்கா நடையையும் அவரது சாமர்த்தியமான பேரத்தையும் நினைவு கூராமலிருப்பதில்லை.

கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு!!!!

அது ஏனோ இந்த கலரிடம் ஒரு தனி மயக்கம். பின்ன நீங்களே சொல்லுங்கள், கறுப்பு என்று ஒரு கலர் இல்லையென்றால் எத்தனை இழப்புகள்.

தலைமுடி கறுப்பாக இல்லையென்று எத்தனை பேருக்கு வருத்தம். வெள்ளை முடிக்காரரையும், இளநரைக்காரரையும் கேட்டால் தெரியும் முடியகத்தில் அவர் செலவழித்த பணக்கணக்கு.

இந்த கலர் முடிக்காரர்களை இதில் சேர்க்க வேண்டாம். என்னதான் காசு கொடுத்து கலர் அடித்துக்கொண்டாலும், புருவத்தையும் இமைமுடிகளையும் கருப்பாகத்தான் சாயம் பூசிக்கொள்கிறார்கள். இவர்களை பார்க்கும் பொழுது எனக்கு பிய்த்துக்கொண்டு போகும் சிரிப்பு. முடி நெற்றிக்கு மேலே பழுப்பு, சிவப்பு, வெண்சிவப்பு, சாம்பல் சிவப்பு, நெற்றிக்கு கீழேயோ கருப்பு. எனது மகனின் நர்சரி கார்ட்டூன் போல இருப்பார்கள்.

குழந்தை பிறந்தவுடன் முதல் கேள்வி, கறுப்பா சிவப்பா என்றுதான். மனதுக்குள்ளே அவர்களுக்கு ஒரு பதில்” எதுவாயிருந்தால் என்னய்யா! இரண்டு கால் கையோடு ஆரோக்கியமாக உள்ளதென்று”.

நான் மட்டும் கருப்பாக உள்ளேனே என்ற அங்கலாயிப்புக்கு, அம்மம்மாவிடம் ஒரு சொலவடை உண்டு. “ சும்மாயிருடி, சிவப்பிக்கு நகைப் போட்டு செருப்பாலே அடி, கறுப்பிக்கு நகை போட்டு கண்ணாலே ஒத்திக்கோ” என்று.

இந்த வெள்ளைக்காரர்களையோ கேட்கவே வேண்டாம். இப்படி மப்பு புடிச்சவர்களெல்லாம் இப்ப காசு கொடுத்து solarium-ல் கலர் மாற்றம் செஞ்சுக்கிட்டு வராங்க. எக்குமாத்தா நம்ம கையில ஒரு ஆராய்ச்சிகட்டுரை மாட்டிக்கொண்டது. கறுப்பு தோல்காரருக்கு தோல் புற்று எதிர்ப்பு சக்தி அதிகம் என்று. கேட்கவே வேண்டாம், இப்ப கைவசம் வைத்துக்கொண்டு எவள் நம்ம கலரை பழித்தாலும் அவளுக்கு ஒரு பதில் கொடுத்து இறுமாப்பு அடைந்து வருகிறேன்.

இப்பொழுது புரிகிறதா, கறுப்பின் மகிமை.

காதல் சின்னம்

எங்கேயோ படித்த ஹிந்தி கவிதை:

காதலிப்பதற்கு முன்:
அளவற்கரிய ஆசை இருக்கிறது
தாஜ்மஹால் கட்டுவதற்கு
ஆனால்,
மும்தாஜ் இன்னும் கிடைக்கவில்லை
அளவற்கரிய ஆசை இருக்கிறது

காதலிக்குங்கால்:
அளவற்கரிய ஆசை இருக்கிறது
தாஜ்மஹால் கட்டுவதற்கு
ஆனால்,
மும்தாஜ் கல்யாணம் இப்பொழுது வேண்டாம் என்கிறாள்
அளவற்கரிய ஆசை இருக்கிறது

கல்யாணத்திற்க்குப் பிறகு:
அளவற்கரிய ஆசை இருக்கிறது
தாஜ்மஹால் கட்டுவதற்கு
ஆனால்,
மும்தாஜ் இன்னும் சாகவில்லை
அளவற்கரிய ஆசை இருக்கிறது

Friday, June 02, 2006

பிள்ளையார் சுழி

எழுத்தாணி கூர் சீவி, பிள்ளையார் சுழி போட்டாயிற்று இன்று

பெயர் காரணம்!!!

யார் பிள்ளை என்ற ஐய்யத்தால்
உன் பெயர்
பிள்ளையாரா?
அனைவருக்கும் பிள்ளை என்பதால்
உன் பெயர்
பிள்ளையாரா?

சின்ன சின்ன ஆசை - 1

அளவில்லாத ஆசைகள் கனவுகள்.அரைக்கால் பாவடை முழங்காலுக்கு மேல் போட்ட பச்சிளம் பருவத்தின் அளவில்லாத ஆசைகள் என்னற்றவை.கமர்கட் மிட்டாய் ஃபேக்டரி அதில் ஒன்று. கமர்கட் மிட்டாய் சாப்பிட்டு இருந்தால் இது புரியும். அப்போ கிடைக்கிற அஞ்சு பைசாவில் மூலையில் உள்ள செட்டியார் கடையில் மூன்று கமர்கட் கிடைக்கும். அல்லது அக்காவுடன் கூட்டு சேர்ந்து பத்து பைசவாக்கி பள்ளி பியூன் கிட்ட வாங்கினால் எட்டு கமர்கட் கிடைக்கும். இந்த கூட்டு சேருவதற்கு அக்காவை தாஜா செய்ய வேண்டும். வெறு ஒன்றுமில்லை, அதிகாலையில் சாணி கரைத்து போட்டு வாசல் கூட்ட வேண்டும். இவ்வளவு செய்து கிடைக்கும் கமர்கட் பற்றி....கருப்பு கலரில் பெரிய எலந்தபழம் அளவு இருக்கும். அந்த வயசு அளவில் யோசித்து பார்க்கும் பொழுது வெல்லமும் தேங்காயும் சேர்ந்து செய்த மிட்டாய் என்று நினைக்கிறேன் (யாராவது தெரிந்தால் சொல்லவும்). வாயில் ஒன்று போட்டால் மெதுவாக கரைந்து (கடிக்காமல் இருந்தால்) ருசிதட்டும். மறந்து கடித்துவிட்டல் பின் பற்கள் எல்லாம் ஒட்டிகொண்டு, நாக்கு நுனிக்கு வேலை வைக்கும். பல் இடுக்கில் சிக்கிகொண்டு எடுக்கும் முயற்சியில் கணக்கு வாத்தியாரிடம் திட்டு வாங்க வைக்கும். சில பல கமர்கட்களில் உள்ள கற்துகல்கள் மயிர் சிலிர்க்க வைத்து எதிரில் உள்ளவர்கள் சொல்வது நிறைய நிஜம் என்று நம்ப வைக்கும்.அடிக்கடி அப்பாவிடம் காசு கிடைக்காது. அத்தி பூத்தாற்போல் அப்பாவிடம் காசு கிடைக்கும் வரை கமர்கட் கனவுகள் இலவசமாக வந்து போகும். அப்பொழுது எடுத்த முடிவு பெரியவளாகி சம்பாதிக்கும் காலத்தில் கைப்பை நிறைய கமர்கட் வாங்குவதுதான். தூக்கம் அப்படியும் வரவில்லையென்றல், ஒரு படி மேலே போய் கமர்கட் ஃபேக்டரி வைப்பதுதான். இதுவும் ஆகவில்லையென்றால் கமர்கட் ஃபேக்டரிகாரனை கல்யாணம் செய்வதுதான்.கடைசிவரை கமர்கட் எங்கு செய்கிறார்கள் என்று கண்டு புடிக்க முடியாததால் கனவுகள் பகற் கனவுகளாகவே ஆயிற்று.பெரியவளாகி ஊர் சென்று, பள்ளியைப் பார்த்தவுடன் முதல் நினைவு ப்யூனும் கமர்கட்டும்தான். வாசிக்கும் பிள்ளைகளிடம் கேட்டால் "அப்படியென்றால் என்ன அக்கா?" என்று கேட்கிறார்கள். பள்ளியின் சின்ன பெட்டிக்கடை, விற்பதோ உருளை கிழங்கு சிப்சும், மத்திய ப்ரதேசத்து மாங்காய் அப்பளமும்.எனக்குள்ளே ஒரு சந்தேகம்!!!! கமர்கட் வித்துவான் வாரிசு இல்லாமல் இறந்து விட்டரோ????அந்தோ எனது கமர்கட் ஃபேக்டரி.

சின்ன சின்ன ஆசை-2

பூஞ்சிட்டாக இருந்த காலத்தில் இன்னொன்று ஆசை!!!

கட்டு கட்டாக தலையில் பூ வைக்க!!

இரண்டு சுண்டு மல்லிகை 50 காசுக்கு கிடைக்கும். காய் மொக்குகளை கூட விடாமல் சரம் தொடுப்போம். மூன்று பங்காக (அம்மா, அக்கா மற்றும் நான்) பிரிக்கும் போழுதே எனக்கு மட்டும் இரண்டு இனுக்கு கூட பிரித்து அல்ப சந்தொஷம் அடைவேன். அப்பா அலுவலக விசயமாக தஞ்சாவூர் சென்றால் அக்கா கொய்யாப்பழம் கேட்க நான் தஞ்சாவூர் கதம்பம் கேட்பேன். பள்ளியில் அடுக்கு செம்பருத்தி சூடிக்கொண்டு வரும் தோழி கூட தற்காலிக எதிரியாவாள். மனோரஞ்சிதம் பூச்சூடிய தோழியோ ஜன்ம எதிரியாவாள். ரோசாப்பூ சுடியவளை நாள் முழுவதும் கேலி, கிண்டல் செய்து ஆற்றாமையை அடக்கிக் கொள்வேன். பனி பெய்யும் மார்கழி மாதத்தில் அதிகாலை ஐந்தரை மணிக்கு அரை மைல் நடந்து பத்து பைசாவுக்கு நூறு டிசம்பூர் பூ வாங்கி கட்டி வைத்துகொள்வேன்.

வீட்டின் பின்புறம் உள்ள அரையடி நிலத்தில் கனகாம்பரம் வளர்க்க எடுத்த பிரம்ம பிரயத்தனங்களை பற்றி ஒரு தொடர் கதையே எழுதலாம். பாட்டி வீட்டில் உள்ள சந்தன முல்லை கொடியில் ஏன் பரண் அமைக்கக்கூடாது என்று பெரிய ஆராய்ச்சியே நடத்தி உள்ளேன். பவள மல்லி பூவை ஏன் சூடக்கூடாது என்ற பட்டி மன்றம், அம்மம்மாவின் மேடையிலே தோற்று விட்டது.

கல்லூரி பெண்கள் விடுதி தோட்டத்தில் முல்லை பூ பந்தல் போட்டு முதல் பூவை பார்த்தவுடன் பிரசவித்த இறுமாப்பு. தொடுத்து, சூடிய சரத்திற்க்கு எதிரி சகமாணவன் ரூபத்தில். பதினெட்டு மாணவர்களில் ஒரு மாணவியாக இருந்ததால், பாலு சொன்னான் ” பூ வைக்காதே! எங்களில் ஒருத்தியாக இருக்க மாட்டாய்”

அப்பொழுது எடுத்த ஒரு முடிவு, பெரியவளாகி தோட்டம் சூழ்ந்த வீடு வாங்க வேண்டும் அல்லது சம்பளம் எல்லாம் பூக்காரனுக்கு என்று!!

இத்தனை பூ பைத்தியம் கண்டு அம்மா சொல்வாள் “ எந்தப் பூ இல்லாத காட்டில் உனக்கு கல்யாணமோ என்று?”

மதுரை மாப்பிள்ளை கிடைத்தவுடன் அம்மாவின் வாக்கு பொய்யானதோ என்ரு நினைத்தேன்!!! அல்ப சந்தோஷம் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. மாப்பிள்ளை வேலை தலைநகர் தில்லியில். தமிழ்நாடு விரைவு வண்டியில் வழியெல்லாம் பூங்கொத்து கண்டு புளகாங்கிதம் அடைந்தேன். வீட்டை அடைந்ததும் மனது ஜிவ்வென்று பரந்தது, விரிந்திருந்த அடுத்த வீட்டு சிவப்பு ரோசவைப் பார்த்து. அடுத்த வீட்டு பஞ்சாபி மாமிக்கு இட்லி, சாம்பார் கொடுத்து எப்படியாவது ஒரு ரோசா சம்பாரித்து விடலாம் என்று அந்த நிமிடமே ஒரு உள்மனது தீர்மானம். அப்படியாக ஒரு நாள் ரோசா சம்பாரித்து கல்லூரிக்கு சூடிக்கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தால் அத்தனை மாணாக்கர்களின் முகமும் அமுக்கவொண்ணா சிரிப்புடன். அர்த்தம் புரியாமல் சக விரிவுரையளரிடம் விசாரித்தால் புரிந்தது, தில்லியில் பூ வைக்கும் பெண்ணுக்கு வேறு ஒரு அர்த்தம் என்று!!!!

வீட்டுக்கனவு என்னவோ நினைவானது சிட்னி மாநகரில். பூக்கனவு பகற்கனவு ஆகிவிட்டது!!!

வழியில் உள்ள பூக்களை ஒரு நிமிடம் தலையில் சூடிய கனவு கண்டு, அதிக ஆசை இருந்தால் பூ- வரிசை படங்களை (உபயம் – கோலிவுட்) சின்னத்திரையில் கண்டு வாழ்க்கை உருண்டு கொண்டு உள்ளது.

அந்தோ! நானும் ஏனது பூ ஆசையும்.