Wednesday, June 14, 2006

நான் கோழையா? விவேகியா?

ரொம்ப நாளா மனசுக்குள் ஒரு நிரடல் !!!

இதுவரை வந்த பாதையிலே நிறைய வேடதாரிகளை பார்த்தாச்சு. ஓவ்வொருவரும் ஒவ்வொரு விதம்!!!

வாழ்க்கையே நாடகமேடையில் அல்லது திரையில் என்பவர்களை பற்றி நான் சொல்லவில்லை! வாழ்வையை ஒரு மேடை என்று நினைத்துக்கொண்டு, நம்பளை எல்லாம் முட்டாளாக்கும் குள்ள நரிகளைப் பற்றித்தான்!

இப்படிப்பட்ட ஒரு கயவனை உங்கள் முன் கூண்டேற்ற விருப்பம்!!!

" படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்" அப்படின்னு பாட்டி சொன்ன பழமொழியை கேட்டதுண்டு. போலிச் சாமியார், பெண் சாமியார் என்று செய்திகளில் படித்துள்ளேன். ஆனால் இப்படி ஒருத்தரை நேரில் பார்த்தபொழுது எழுந்த கொதிப்பு இன்னும் அடங்கவில்லை. இந்த சாமியார் விளையாடுவதெல்லாம் பச்சிளம் பாலகிகளில் இருந்து, பருவப்பெண் வரைக்கும். சாமியார் என்பதினால், இவர் காவி கட்டி, ஆச்ரமத்தில் வசிப்பவர் இல்லை. இரு பிள்ளைகளுக்கு அப்பன்.

தாய்நாட்டில் உறவினர்களை விட்டு அயல் நாட்டில் உள்ள நமது நாட்டினரில் தமது உறவுகளை கண்டு களிக்கும் மறத்தமிழர்களில் இவனும் ஒருவன். இந்த கயவனின் ஆதிமூலம்…....

தொழில் நுட்பத் துறையில் மேல் படிப்பு படித்து (என்ன படித்தானோ!!! இல்லை படித்தது இதையும் சேர்த்தா என்று தெரியவில்லை!!!!!) இந்தியாவிலும், இப்பொழுது இங்கும் ஒரு பெரிய புகழ்பெற்ற கம்பனியில் மேலதிகாரியாக பணியாற்றுபவன் (நல்ல கெட்-அப் தான்!) . வீடோ ஒரு சின்ன கோவில் மாதிரிதான். திரும்பிய இடமெல்லாம் மதகுருக்களின் படங்களும் (யார் யார் என்ற பேர் வேண்டாமே!!! அவர்களை அவமதிப்பது போலாகும் இவனின் திருவிளையாடல்கள்) வீட்டு புத்தகாலயமோ சமய, நீதி மற்றும் பெரும் போதகர்களின் புத்தகங்களால் நிறைந்து இருக்கும். காலை, மாலை என இரண்டு மனி நேர பூசைகள். உண்ணும் உணவோ உப்பு, காரம் தாளிதம் இல்லாமல் (அதனால்தான் சுரணை இல்லையோ என்னவோ!!!) இது எல்லாம் போதாது என்று வார விடுமுறை தினம் உள்ளூர்களில் சமய, வேத, உபநிஷத போதனைகள். வெளி நாட்டில் இதற்கு உள்ள மவுசை கேட்கவா வேண்டும். கூட்டமோ, கூட்டம். நமது வேதங்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும், கலாச்சாரத்தை கற்று கொள்ளவும் என்று ஆர்வமுடன் மொய்க்கும் இளைஞர் அணி ஒரு பக்கம்.

இத்துனை பெரிய சாமியாருக்கு எல்லா வீட்டிலும் பெரிய தடபுடல் வரவேற்பு. வீட்டில் பெரிசுகள் இருந்து விட்டால், இவன் எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக ஆகிவிடுவான். " பாரு, இந்த வயசில் இப்படி ஒரு ஞானம் என்று" அழகான இப்படி ஒரு மாயக்கண்ணடி அனைவருக்கும் மாட்டி விட்டு விட்டு, இந்த ஆசாமி விளையாடுவதெல்லாம், வீட்டு பெண் குழந்தைகளிடம்தான். எப்படியோ அனைவரது கண்ணிலும் மண் தூவிவிட்டு சின்னச் சின்ன சில்மிஷங்களை ஆரம்பித்துவிடுவான்.

பாலியல் கல்வி என்பது, இங்கு பள்ளிகளில் உள்ளதுதான். ஆனால் அது ஐந்தாம் வகுப்பிலிருந்துதான். அது வரை "தொடுதல்" பற்றித்தான் பள்ளியில் சொல்லித் தருவார்கள். பெற்றோர்கள் (என்னையும் சேர்த்துதான்) பிள்ளகளை குழந்தையாகவே பாவித்து சில விடயங்களை சொல்லித்தருவதில்லை. (பிஞ்சிலே பழுக்க வேண்டாம் என்றுதான்)

இந்த சாமியாரின் லீலைகளைப்பற்றி நான் கேள்விப்பட்டபொழுதெல்லாம், நம்ப முடியாத அதியசமாகவே இருந்தது. சின்னப் பிள்ளைகளிடம் செய்த சில்மிஷங்களைப் பார்த்த பொழுது, ச்சீ, ச்சீ அப்படியெல்லாம் இருக்காது, எனது கண்ணோட்டம்தான் சரியில்லை, எனது கண்தான் காமாலைக்கண் என்று நினைத்து இருந்தேன்.

கடந்த இரு வாரத்திற்கு முன்பு குடும்ப தோழி எனக்கு தொலைபேசியடித்து அழமாட்டாத குறையாக, இவனின் திருவிளையாடல்களை (அவளது 16 வயது பருவப்பெண்ணிடம்) சொன்ன பொழுது, எனக்கு காமாலை கண் இல்லையென்று உறுதியானது. கணவரிடம் பேசும்பொழுது இனிமேல் அவனை வீட்டுக்குள்ளே விடக்கூடாது என்று முடிவு செய்தோம். ஆனால் இதனொடு கொடுமை முடியவில்லை.

இதுவரை கேள்வி ஞானமாக இருந்ததை, போன வார இறுதியில் கண்கூடாக கண்ட பொழுது அடைந்த கொதிப்பு இன்னும் அடங்கவில்லை. ஓரு சக நண்பரின் வீட்டு விருந்துக்குக் சென்றிருந்தோம். விருந்து முடிந்து, சின்னச் சின்னக் கூட்டமாக அளவாலவிக்கொன்டிருந்தோம். நான் எனது பெண், மற்றும் நண்பர்களின் குழந்தைகள் எல்லோரும் ஹால்வேயில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது அங்கு வந்த இவன் எனது தோழியின் பெண்ணை பின் புறமிருந்து கட்டி தழுவிவிட்டு எங்களிடம் கலந்து அசடு வழிய ஆரம்பித்தான்.

கண்ணெதிரே கண்ட வெறி, பளார் என்று ஒரு அறை விடவேணும் என்ற வேகம் இதனை அடக்கி கோட் பாக்கேட்டுக்குள் எனது கைகள், மானசீகமாக அவன் கழுத்தை நெறித்தது.

உடனேயே தண்டிக்க வேண்டும் என்ற ஆவேசம் இருந்தது. ஆனால் விவெகம் அதனை தடுத்து விட்டது!!!! அத்தனை பேர் முன்னிலும் அவனை அடிக்க எனக்கு தைரியம் இருந்தது, ஆனால் அவனை ஏன் அடித்தேன் என்று சொல்ல தைரியம் வரவில்லை.

இள ரத்தமாக இருந்த பொழுது இருந்த தைரியத்தை நான் இழந்து விட்டேனா? இதனின் தீர்வு என்ன? இவனை சமுகப்பிரஷ்டம் செய்வெதென்பதுதான் தீர்வா?

உதவுங்கள் நண்பர்களே….

16 comments:

சுதாகர் said...

தோழியே,
அந்த இடத்தில் நீங்கள் நடந்தது விவேகமென்றே நான் கருதுகிறேன். ஆனால் அவனைப் பற்றிய உண்மைகளை, மற்றவர்களிடம் உங்களால் எந்த அளவிற்கு எடுத்துச் சொல்ல முடிகிறதோ அந்த அளவிற்கு நீங்கள் தைரியசாலியென நான் நினைக்கிறேன்.

அவனைப் பற்றி முடிந்த அளவு ஆதாரங்களைத் திரட்டி, எல்லோருக்கும் e-mail அனுப்பினால் மக்களிடம் சற்று மாறுதல் வரும் என்பது என் கருத்து.

வெளிநாட்டில் இதற்கு அதிகமான தண்டனை உண்டு எனக் கேள்விப் பட்டுள்ளேன். எனவே, காவல் துறையை நாடுவதும் நன்று.

துளசி கோபால் said...

இதே உணர்வு மற்றவர்களுக்கும் குறைஞ்சபட்சம் சிலருக்காவது இருந்தால்தான் இதுமாதிரி நயவஞ்சகர்களை ஓரம் கட்ட இயலும்.

ரவி said...

பிரகஸ்பதியின் பெயர் / இருப்பிடம் முகவரி வெளியிடுங்க....அல்லது தனிமடலில் அனுப்புங்க எனக்கு...

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

அடுத்த முறை எங்கேயாவது வாலாட்டினால் அங்கேயே வைத்து அவமானப்படும்படி கேள்வி கேட்கலாம். ஆனாலும் பார்வைக்குறைபாடுகள் இருக்கும் வரை பசுத்தோல் போர்த்தியதைப் பார்த்தாலும் பசுவாயே தெரியும்.

பேசிக்கொண்டது போல, இளமைத் துணிச்சலில் செயற்படுவதும், அனுபவம் பெற்று விவேகத்துடன் துணிச்சலைப் பிரயோகித்துச் செயலாற்றுவதும் வேறுதான். ஒரு சம்பவம் நடந்து முடிந்த பின்பு அட!இப்படிச் சொல்லியிருக்கணும்/செய்திருக்கலாம் என்று நினைப்பது இயல்பு. இனிமேலும் நடந்தால் என்கிற கேள்விக்கு விடையாக எப்படிச் செயற்படுவீர்கள் என்பதைப் பற்றிய தெளிவைக் கொண்டிருப்பது "செய்திருக்கலாம்/சொல்லியிருக்கலாம்" வகையான சிந்தனைகள் கொண்டு மனதை அலைக்கழிப்பதிலும் விட நலம் பயக்கும் எனத் தோணுகிறது.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

ஒரு மெபைல் கேமிராவை எடுத்துக்கொண்டு படம் பிடித்திருக்க வேண்டிதுதானே..இப்படி அலட்சியமா சொல்றீங்க..

இவனிடம் நீங்கள் அலட்சியம் காட்டினால் அவன் இனி செய்யப்போகின்ற பாவங்கள் உங்களுக்கும்தான் சகோதரி..

ஆகவே உரிய நடவடிக்கை எடுங்கள்..

தயவுசெய்து காவல்துறையை நாடுங்கள்.. இவனைப் போன்ற சதை வியாபாரிககளை

எல்லாம் சும்மா விடக்கூடாது

பொன்ஸ்~~Poorna said...

சுத்தி இருக்கும் நாலு பேரிடம் சொல்லி ஒரு விழிப்புணர்வை முதல்ல உண்டு பண்ணுங்க.. ஆனா, அவங்க நம்பணும்.. அது தான் முதல் படி.. அப்புறமா கையை நீட்டி நல்லா அடிக்கலாம் இல்லை, அந்த வேலையே உங்களுக்கு இருக்காது, மத்தவங்க பாத்துக்குவாங்க..

ஞானியார் சொல்வது போல் போட்டோ கூட எடுக்கலாமே!

Thekkikattan|தெகா said...

நீங்கள் கூறியதை கேட்கும் பொழுது அந்த சமயத்தில் உங்களின் நியாய கோபத்தை தள்ளிப் போட்டிருந்தாலும், இதனை கண் தெரிந்து விட்டு விடுவது அவ்வளவு உசிதமாக பட வில்லை.

அவர் செய்வதற்கான தட்டணையை இப் பருவத்திலே அனுபவத்தால் தான் நிறையெ குழந்தைகளின் எதிர்கால பிரட்சினைகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைப்பதாக பொருள்.

நீங்கள் already abuse பண்ணப் பட்ட குழந்தைகளின் மனோ நிலையை அறிந்தால் உங்களுக்கு இந்த தயக்கம் வராது. கூகுளில் சென்று தேடிப் படித்துப் பாருங்கள், அது எது போன்ற உலகிற்கு இது போன்ற குழந்தைகளை இட்டுச் செல்கிறது என்ற விகாரம் உங்களுக்கு விளங்கும்.

அலட்சியம் வேண்டாம். ஆக்ஸன் தேவை.

தெகா.

கஸ்தூரிப்பெண் said...

சுதாகர்,
இந்தப் பதிவே ஒரு ஆரம்பம்தான். இதற்கு விரைவில் ஒரு முடிவு காண்பேன் என்ற நம்பிக்கை உள்ளது

கஸ்தூரிப்பெண் said...

துளசி,
இது மாதிரி நடப்பது இப்பத்தான் மூன்று பேருக்குத் தெரிந்துள்ளது. இருவருக்கு ஆத்திரம் உள்ளது. மூன்றாமவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய். இந்த சிறு துளி பெரு வெள்ளமாகி, சுனாமியாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை

கஸ்தூரிப்பெண் said...

செ.ர,
அடிபட்டவனுக்குத்தான் வலி தெரியும் என்று நினைத்திருந்தேன். ஆனால் படித்த உங்களுக்கே புரிந்திருப்பது சந்தோஷம். அடுத்த முறை (அதுவரை அவனை விடப்பொவதில்லை) இங்கனம் நடக்குங்கால் முகவரி கட்டாயம் அனுப்புகிறேன்.

கஸ்தூரிப்பெண் said...

மழைப்பெண்ணே!
மனதில் உள்ளதைக் எழுத்தாலும், பேச்சாலும் கொட்டிய பிறகு ஆத்திரம் அடங்கி இனி எப்படி நடக்க வேண்டும் என்ற தெளிவு பிறந்துள்ளது.

கஸ்தூரிப்பெண் said...

ஞானியாரே(அப்படித்தானே எல்லோரும் கூப்பிடுகிறார்கள்),
யோசனை நன்றகத்தான் உள்ளது. நான் என்ன கேண்டிட் கேமராவா தூக்கிக் கொண்டு அலைகிறேன். நடந்த வைகள் வினாடி நேரத்தில். எந்த ஊர் காவல்துறைக்கும் ஒரு evidence வேணும். அதற்குத்தான் இந்த கொந்தளிப்பும், காத்திருப்பும்.

கஸ்தூரிப்பெண் said...

பொன்ஸ், தெ.கா,
விவேகமாக நடந்து விட்டோம் என்று இறுமாப்பு அடையவில்லை. உங்கள் அனைவரது பின்னூட்டங்கள் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற தெளிவைத் தந்துள்ளது. இதுபோல் பாடுபட்ட பெண்ணை நேரில் கண்டதுண்டு. ஒருத்தி ஆண் வர்க்கத்தைக் கண்டாலே அரண்டு மிரண்டு வலிப்பு வந்து அலைகிறாள். இன்னொருத்தியோ, மருத்துவ உதவியால் இன்று குழந்தைகளுடன் சந்தோஷமாக உள்ளாள்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

அவனை சுட்டுக் கொல்ல வேண்டாம், சப்புன்னு கன்னத்துல ஒரு அறையாவது விட்டிருக்க வேண்டும் அல்லது காவல் துறையில் புகாரிட்டிருக்க வேண்டும். இது போன்றவர்களை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காமிக்க வேண்டும் இல்லை என்றால் பலர் இது போல பாதிக்கப் படுவார்கள்.

கோவி.கண்ணன் said...

//அத்தனை பேர் முன்னிலும் அவனை அடிக்க எனக்கு தைரியம் இருந்தது, ஆனால் அவனை ஏன் அடித்தேன் என்று சொல்ல தைரியம் வரவில்லை//
பல நாள் திருடன் ஒருநாள் மாட்டுவான் பாருங்க. அப்பொழுது காரி உமிழ தயங்கிவிடாதீர்கள்

Syam said...

நீங்கள் செய்தது சரியே, சாமியார்களை பொருத்த வரை நம் மக்கள் அனைவருக்கும் காமாலை, அந்த நேரத்தில் நீங்கள் அவனை ஏதாவது பன்னி இருந்தால் உங்களை தான் அனைவரும் தப்பாக நினைத்து இருப்பார்கள், நம் மக்கள் முட்டள்களாக இருக்கும் வரை இவனுகளை ஒன்னும் பன்ன முடியாது...நீங்கள் தகுந்த ஆதாரத்துடன் இவனை தோலுரிக்க வேண்டும்....அப்புறம் மக்கள் அவனை பரேடு கிளப்பி விடுவார்கள்